October 19, 2011

வேண்டாம் உன் வேர்கள்


பச்சை போர்வை கட்டி
வான் தொடும் அவசரத்தில் 
ஓங்கி உயர்ந்த நீ 

உன் வேர்கள் என்னில் 
ஆழமாகப் புதைந்து
வியாபித்து துளைத்து
உள்ளே இன்னும் உள்ளே....

உன் ஆதிக்கத்தை 
நான் விரும்பவில்லை
எங்கோ இருந்து நீ
என்னில் நடப்பட்டது 
எனக்கு சம்மதமில்லை

நீ வளரும் ஆசையில் 
என்னில் நிலைகொண்டதை
உன் இருப்புக்காக என் 
சுயம் சுரண்டப்பட்டதில்
எனக்கு உடன்பாடில்லை

நீ கிளை பரப்பினாய்
இலை துளிர்த்தாய்
விழுது விட்டாய்
உன் வேர்கள் என் மேனியில்
ஒரு இடம் மிச்சமில்லாமல்
நீ உன் ஆயிரம் விழுது கரங்களால்
என்னை விழுங்கிவிட்டாய்
உன் சருகுகளால் நான்
காய்ந்து போனேன்..

உன்னை என்னில் இருந்து
பிடுங்கி எறிய மனம் துடிக்கிறது
உன் வேர்கள் தொட முடியாத
தூரத்திறகு ஓட வேண்டும்
உன் பச்சைவாசனை படாத
இடத்திற்க்கு நகரவேண்டும்

உன் வருகையால் 
நான் மழுங்கடிக்கப்பட்டேன்
நான் வானம் பார்த்து
பல நாளாகிவிட்டன
என்னில் மழையோ ஒளியோ
இப்போது விழுவதில்லை
நீ அதை விடுவதுமில்லை

உன் வேர்களை கடித்து
உமிழ நினைக்கிறேன்
ஆனால் நீயோ ஆழமாக
இன்னும் ஆழமாக...

நீ ஒரு மலட்டு மரமாய் 
இருந்திருந்தால் சற்றேக்குறைய
ஆறுதல் கண்டிருக்கலாம்
ஆனால் நீயோ வீரியமுள்ள 
விந்தாகிவிட்டாய்

இதோ உன்னில் 
ஏகப்பட்ட விதைகள்
இன்னும் ஆழமாய் அவையும்
எங்கேனும் வேரூன்றும்

ம்ம்ம்ம் போகட்டும் மரமே
என்னில் இருந்து என் பெண்மை,
கண்ணீர்,இரத்தம் ,என் சுயம்
எல்லாம் உன்னால் உறிஞ்சப்பட்ட
மொத்தமாக உறிஞ்சப்பட்ட
ஒரு பொழுதில் நீ வீழ்ந்து போவாய்
உன் வேர்களுக்கான நிலம் அற்றுப் போகும்
ஆமாம் சத்தியமாய் நீ வீழ்ந்து போவாய்

_ வைஷு

April 13, 2011


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்
கர வருடம் அனைவருக்கும் சுபிட்சத்தை வழங்கட்டும்

February 02, 2011

அவள் காதலுக்காக காத்திருந்தாள்

பாதியில் நின்ற படிப்பு
மேனியை இறுக்கும் பட்டு
தலை நிறைய கதம்பம்
மனம் முழுதும் ஆதங்கம்

பெண் பார்க்க வருகிறார்கள்
தாயாராய் இரு என்றார்கள்
கேட்டால் சொல்லலாம் என
ஒரு கவிதை கூட எழுதி வைத்தேன்

"சமைந்து விட்டாளா? "
"சமைக்க தெரியுமா ?"
முடிந்து விட்டது பேட்டி
இதற்கா இத்தனை போட்டி


அழுதேன் , தொழுதேன் ,
ஆயிரம் முறை அடித்துச் சொன்னேன் .
"காதலா ?"கதறினாள் அன்னை
"காலை உடைப்பேன் "எகிறினார் தந்தை

கவிதை என்றேன் ,கனவு என்றேன்
கற்பனையில் நான் கண்ட காதலன்
நிச்சயம் இவன் அல்ல என்று
எத்தனையோ தரம் சொல்லிப்பார்த்தேன்

ஆயிரமாயிரமாய் சம்பளம்
,ஆடம்பர வீடு
ஆங்கிலத்தில் பேச்சு
இவளுக்கென்ன ஆச்சு ??

அம்மாவின் அழுகை
அப்பாவின் அதட்டல்
அண்ணனின் சத்தம்
என் கனவுகள் தொலைந்ததே மிச்சம்

மனதிற்கு வேலி
கழுத்திற்கு தாலி
இனியென்ன தோழி ,
நான் ஆகி விட்டேன் கூலி

கடமை முடிந்ததென அங்கே கண்ணீர்
கனவு கலைந்ததென இங்கே செந்நீர்
விதியை நொந்துகொண்டே
விளக்கணைக்க சம்மதித்தேன்

அவள் காதலனுக்காய் காத்திருந்தாள்
பெற்றோரோ கணவனை கட்டி வைத்தார்கள்
கணவனிடம் காதலனை தேடிப்பார்த்தாள்
பாவம் அவன் வெறும் கணவன் தான்

என்றோ படித்தது ஏனோ ஞாபகம் வர
ஏக்கம் நிறைந்த மனதும்
தூக்கம் துறந்த விழியுமாய்  நான்

கண் , காது, கால் ,கை
அங்கமெல்லாம் வெறி கொண்டு
காயமே காமமாக கதற வைத்த கணவன்

முத்தம் என்ற பெயரில்
நித்தம் ஒரு யுத்தம்
மோக வெறியில் என்னை
மூழ்கடிக்கும் அவசரம்

கலர் கலராய் கனவுகளில்
ரோமியோவோடும் ,சாலீமுடனும்
அந்த மலைச்சாரலில் மன்மதனோடும்
துஷ்யந்த மயக்கத்தில் கவிதை பேசி
திரிந்த போதும் ..
சத்தியாமாய் எண்ணவில்லை
நிஜத்தில் துகிலுரியப்போவது
ஒரு துச் சாதனன்  என்று

விடிய விடிய உறவு
விடிந்த பின்னே உறக்கம்
கசக்கி எறியப்பட்டது நான் மட்டுமல்ல
என் கனவுகளும் தான்

அவன் உச்சத்தின்
எச்சம் சுமக்கவும்
உண்டதின் மிச்சம் செரிக்கவும்
மட்டுமே நான்

களையப்பட்ட ஆடை
,கவிழ்க்கப்பட்ட உடல்
கவனிப்பாரற்ற மனம்


அடுப்புக்கரி , அழுக்குத்துணி ,
அடுத்தடுத்து பிள்ளை , ஆரும்
அறியாத் தனிமை ..

தந்தி அறுந்த வீணையாய்
ஊமைப் புல்லாங்குழலாய்
பாவம் அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை
இல்லை இல்லை வாசிக்க அறியவில்லை

உறங்காமலே விழித்து
உணர்வுகள் மறைத்து
உயிரோடு எனை உன்
உதடுக்குள் புதைத்து

உண்டாகி இருந்தாலும்
உன்னோடு கலந்து
இந்திரியம் நனைத்த உடை
நீயறியாமல் துவைத்து
ஊருக்காய் உறவுக்காய்
உபரியாய் சிரித்து
உடலும் உணர்வும் சிதற சிதற
கழுத்தும் வயிறும் கனக்க கனக்க


பொத்தி வைத்த என் உணர்வுகள்
கணம் தாங்காமல் வெளிவந்த போது
கண்ணகி என்றாய் கதை பல சொன்னாய்
மாதவியும் மங்கை என மனதிலும் நினையாய்


மாதம் தவறாமல் வரும் அம்மா
"உனக்கென்னடி குறை ?" என்பாள்
எப்போதாவது வரும் அப்பா
"எத்தனை பவுன்  இந்நகை?" என்பார்

ஊமையின் கனவை போல்
இந்த பொன் நகைக்காக
என் புன்னகை பறிக்கப்பட்டதை
யாரும் அறியார்

என் தங்கைக்கும் திருமணமாம்
ஆயிரம் ஆயிரமாய் சம்பளம்
ஆடம்பர வீடு , ஆங்கில பேச்சு ..

ஏனோ எனக்கு சொல்லத்தோன்றுகிறது
அவள் காதலனுக்காய் காத்திருந்தாள்
அவள் பெற்றோர் ஒரு கணவனை
கட்டிவைத்தார்கள் ...........
பாவம் வெறும் கணவனை கட்டி வைத்தார்கள்


January 29, 2011

இசையானவள்

இசையாக நீயிருந்தாய்  என் 
இரு செவி உட்புகுந்தாய்
இமை நடுவில் குடியிருந்து
இமை மூட தடையிருந்தாய்

கனவாக நீ இருந்தாய்  என்
கற்பனைக்கு உயிர் கொடுத்தாய்
கரம் பிடிக்க எண்ணி வந்தேன்
"நான் கன்னியல்ல கனவு " என்றாய்

இரவோடு ஒளி வீசும் தாரகையாய்
உன்  கண்கள் .
தாரகையை தோற்கடிக்கும் தன்மதியாய்
பிறை வதனம்
மதி மூடும் மலர் மஞ்சு தனை ஒத்த
கருங்கூந்தல்
நின் மனதோடு நான் இருந்தால்
பகலெல்லாம் பௌர்ணமிகள்

மாமன்னன் வாள் இணைய
கூறிய நின் நாசி
என் பசி மயக்கம் தீர்த்துவைக்க
சொல்லாயோ ஒரு சேதி

உலகத்து அழகையெல்லாம்
ஒரு வட்டில் வடித்தெடுத்து
உறை குத்தி கடைந்தெடுத்த
அமிர்தமாய் உன் உதடு
என் உயிர் உறைய வைக்குதடி
உறையிட்டு அதை மூடு

வளைவற்ற ஆடி யாய்
உண்டங்கே ஓர் கழுத்து
முகம் பார்க்க முயன்றாலோ
வழுக்கி விடும் தலையெழுத்து

மாறன் அம்புகளாய் வம்பு
செய்யும் வம்பிரண்டு
கோயில் கலசமாய்
வடிவெடுத்த பெண்ணழகு

இல்லாத இடை காட்டி
இம்சிக்கும் வஞ்சி
அவள் சொல்லடா மாட்டளோ
எனை கொஞ்சம் கொஞ்சி

இளம் காலை நேரத்து
தென்றலாய் தேகம்
இலையுதிர் காலத்து
மரமானேன் நானும்

இதமான குளிர் நேர
தேநீரும் நீதான்
எனை இரவோடு
முனகவைத்த
முகாரியும் நீதான்

உன் இதமான பார்வை போதும்
இம்மையிலும் மோட்சமடி
உன் இதழ் வார்த்தை போதுமடி
என் உயிர் பிரியும் உனதடியில்

January 13, 2011



வணக்கம் நண்பர்களே !
நான் வைஷு .இது எனது முதல் வலைப்பதிவு .
அபரஞ்சி..... "அபரஞ்சி "என்றால் புடம் போடப்பட்ட
பொன் என்று அர்த்தப்படும் . பொன் எவ்வளவு விலைமதிப்பற்றது .
அதுவும் புடம் போடப்பட்ட பொன்னின் தரம் நீங்களே ஊகியுங்கள் ..
இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எனது படைப்புக்களை அளிக்கும்
நோக்கத்துடன்
                 _ நான்
                      உங்கள் வைஷு